நா பிறழ் சொற்றொடர்கள்

               
              நா பிறழ் சொற்றொடர்கள்
மொழி விளையாட்டு சொற்களை
 உச்சரிக்கும் பயிற்சி தருவதாக இருக்கும்.
 
 ழகர றகர லகர எழுத்துகள் சரியாக 
 உச்சரிக்கப்பட  சில சொற்றொடர்களைச் 
 சொல்லிச்சொல்லி 
 பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக
 இத்தகைய சொற்றொடர்களைச்  
 சொல்லி விளையாடுவர்.நாமும்கூட
விளையாடியிருப்போம்.
 அவைதான் இன்றும் நாம் ஓரளவுக்கு
 நல்ல தமிழ் உச்சரிப்புடன் பேசுவதற்கு
 உதவியாக  இருந்து வருகிறது
என்பது மறுக்க முடியாத உண்மை.
 
 இன்றும்கூட  ஒரு சில மாவட்டங்களைச் 
சேர்ந்தோர் ள , ல , ழ வேறுபாடு 
இல்லாமல் பேசுவதைக் 
 கேட்கும்போது தமிழ் 
 என்ன பாடுபடுகிறது என 
வருந்துவதைத் தவிர 
வேறுவழி தெரியாது விழிபிதுங்கி
நிற்போம்.
படிக்காதவர்  என்றால் அட ....போகட்டும் 
அறியாமை என்று விட்டுவிடலாம்.
   
படித்தவர்கள் புத்தகங்களில் 
கண்டிப்பாக நல்ல தமிழ்ச் சொற்களை 
மட்டுமே படித்திருப்பார்கள்.
அவர்கள் தவறாக உச்சரிக்கும்போது 
வியப்பாக இருக்கும்.

சரியான உச்சரிப்பு 
இல்லை என்றால் பொருள் மாறிப் போகுமே!
பிழைபட பேசுவது தவறாகாதா.?
பிழையில்லாமல் பேச பயிற்சி 
எடுத்துக்கொள்ள வேண்டும்
என்று கொஞ்சம் சிரத்தை எடுத்துக்
கொண்டாலே போதும். தமிழைச் சரியாக
உச்சரிக்க முடியும்.

தமிழ் மொழி என்பதை தமில் மொலி 
என்றால் எப்படி இருக்கும்?
நகைப்பாக இருக்கிறதல்லவா!

 வாழைப் பழம் என்று சொல்ல வராது.
 வாயப் பயம் என்பவர்களை 
என்னவென்பது?

" சித்திரமும் கைப்பழக்கம்
 செந்தமிழும் நாப்பழக்கம்"

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் மட்டுமே
சரியான உச்சரிப்போடு மொழியைக்
கையாள முடியும். 

 அத்தகைய பயிற்சி  எடுத்துக்கொள்ள 
 நா நெகிழ் சொற்றொடர்கள் 
 உதவுவதாக இருக்கும்.

லகர ழகர ளகர வேறுபாடு
தெரிந்து பேச வேண்டும்.
ணகர னகர வேறுபாடு 
தெரிந்திருக்க வேண்டும்.
இதற்கு நிறைய சொற்கள் 
தெரிந்து வைக்க வேண்டும்.
குறிப்பாக பொருள் வேறுபாடு
தெரிந்து பேசப் பழகிக்கொள்ள வேண்டும்.

அடுத்தது நா பிறழ் பயிற்சி.
நா பிறழ் பயிற்சி என்பது
ஒத்த ஒலியுடைய சொற்கள்
அடுத்தடுத்துவரும்படி அமைந்த
தொடர்களை விரைவாகவும் பிழையின்றியும்
கூறுமாறு பயிற்சி  அளிப்பதுதான்
நா பிறழ் பயிற்சி.
   
 பள்ளிப் பருவத்தில் சொல்லிப் 
 பழகியவைதான். 
ஆனால் இப்போது அந்தச் சொற்றொடர்களை
மறந்து போயிருப்போம்.
நினைவுபடுத்திச் சொல்லித்தான்
பார்ப்போமே!
 

" ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி
 உருளுது புரளுது."

" கொக்கு நெட்ட கொக்கு 
 நெட்ட கொக்கு இட்ட முட்ட 
 கட்ட முட்ட"

" இது யாரு தச்ச சட்டை
  எங்க தாத்தா தச்ச சட்டை "

இந்தச் சொற்றொடர்களை நாம் கண்டிப்பாக
சொல்லி விளையாடியிருப்போம்.
சொல்லத் தெரியாமல் தத்தக்காப்
பித்தக்கா என்று மாற்றி மாற்றி
சொல்லி நம் தோழிகள் அனைவரும்
சிரிக்க அந்தநாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே....நண்பனே...
நண்பனே...
இந்தநாள் அன்றுபோல் இல்லையே
அது ஏன்? ...ஏன்? நண்பனே
என்று கேட்க வைக்கிறதல்லவா!
இந்தநாளையும் அந்தநாளைப்
போல் இனிதாக்கிக் கொள்ள
நமக்குத் தெரியாததா என்ன?

வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லச்
சொல்லி விளையாடுங்கள்.
அலுவலகத்தில் ஓய்வு நேரங்களில்
விளையாடுங்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
பேசுங்கள். நல்ல பயிற்சியாக
அமையும். கூடவே நீங்கள்
இருக்குமிடத்தைக் கலகலப்பாகவும்
வைத்துக்கொள்ளலாம்.
வாருங்கள். உங்களுக்காக
இன்னும் ஒருசில
சொற்றொடர்கள்.

1. " வீட்டுகிட்ட கோரை 
 வீட்டு மேல கூரை
 கூரை மேல நாரை
நாரை பார்த்த தேரை
நாடிப்போனது ஊரை"

2. "அவள் அவலளந்தாள்
இவள் அவலளப்பாள்
இவள் அவலளந்தால்
அவள் அவலளப்பாள்
அவளும் இவளும் 
அவலளக்காவிட்டால்
எவள் அவலளப்பாள்"

3. " ஆடுகிற கிளையில 
 ஒரு கிளை தனிக் கிளை
 தனிக்கிளை தனில் வந்த
  கனிகளும் இனிக்கல
 எனக்கது சுவைக்கல"

4."  கிழட்டுக் கிழவன் 
     கொளுத்தும் வெயிலில்
     சடுகுடு விளையாட
     குடுகுடுவென ஓடி
     சடசடவென விழுந்தான்"
  
5. "சட்டி நிறைய இராலு 
    இராலு தின்ன கோவாலு
    எங்கப் போனான்
     நீ கேளு"

6." பச்சை நொச்சை கொச்சை
     பழி கிழி முழி
    நெட்டை குட்டை முட்டை
    ஆடு மாடு மூடு"
           
7.. ."காக்கா காக் காவென்று கத்தினதால
     காக்கான்னு பேரு வந்ததா
     காக்கான்னு பேரு வந்ததால
     காக்கா கா... கா..ன்னு கத்துதா"

8. "ஒரு கை எடுக்க 
     மறு கை கொடுக்க
    பல கை அடக்க
    உலக்கை எடுக்க
    ஓடினான் தலை தெறிக்க

9.   "ஏணிமேல கோணி
      கோணிமேல குண்டு
       குண்டுமேல புல்லு
       புல்லுக்குள்ள பூச்சி
       பூச்சி கண்ட ஆச்சி
      விட்டுவிட்டார் மூச்சு"

  10. . " பழுத்த கிழவி
        கொழுத்த மழையில்
       வழுக்கி விழுந்தாள்"

11.   ."  வாழைப்பழம் அழுகி
       குழுகுழுத்து
        கீழே விழுந்தது."

12.    "சரக்கு ரயிலை
        குறுக்கு வழியில்
        நிறுத்த வந்த
        முறுக்கு மீசைக்காரன்
         சறுக்கி விழுந்தும்
        முறுக்கு மீசை மடங்கல "

13.  .."அங்கு இங்கு 
          எங்கும் போயி
          நுங்கு தின்ன
          பங்கு கேட்டுடாள்
         பஞ்சுப்பழம் "
      

14.. குலைகுலையா நொங்கு
      வெட்டிப் போட்டான் வெங்கு
      உறிஞ்சி தின்னான் சங்கு

15. தட்டு நிறைய புட்டு
     புட்டு மேல லட்டு
     லட்டு தின்ன துட்டு
     துட்டு மொத்தம் எட்டு
     
       
16.   "பனை மரத்துல ஓலை 
        ஓலை மேல பாழை
        பாழைக்குள்ள தேரை"


17. "ரெண்டு செட்டு சோளத் தோசையில
      ஒரு செட்டு சோளத் தோசை
      சொத்தத் தோசை "


18. கோழி கிழடு
       கோழி குடலும் கிழடு"

19.. சேத்துக்குள்ளே சின்னப்பிள்ளை
       சின்னப்பிள்ளை காலுக்குள்ளே 
      சித்தெறும்பு சிக்கிடுச்சு"

 20.  பாதை எல்லாம் தண்ணி
        தண்ணிக்குள்ள  துள்ளி
        மேல வந்தாள்  வள்ளி
     
ஐந்தைந்து முறை வேகமாக
சொல்லிப் பழகுங்கள்.

இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.
நல்ல பயிற்சியாகவும் இருக்கும்.

மனதும் மகிழ்ச்சியாக இருக்கும்.


Comments

  1. அருமையான பயிற்சி.அனைவரும் பழகலாம்.

    ReplyDelete
  2. Very interesting word game. Lots of exercises are given to achieve her goal. Good job.

    ReplyDelete
  3. நல்ல பயிற்சி... நாங்க விளையாண்டோம் எங்க ட்யூஷன்ல

    ReplyDelete

Post a Comment

Popular Posts