மயங்கொலிகள் _ ற , ர

   மயங்கொலிகள் _  ற  ,  ர



அறம் செய விரும்பு.
அரம் செய்கிறான்.

அறையிலிருந்து அரை மயக்கத்தோடு
வெளியில் வந்தான்.

குளக்கரையில் அமர்ந்து கறைபடிந்த
ஆடையைத் துவைத்தான்.

உயர் அதிகாரி துரை தன்  துறைரீதியான
அலுவல் நிமித்தமாக மதுரை வந்திருந்தார்.

இந்தச் சொற்றொடர்களில் றகர
ரகர வேறுபாடு இருப்பதைக் காணலாம்.
இவற்றுள் ஒரு எழுத்துக்குப் பதிலாக
இன்னொரு எழுத்தை எழுதிவிட்டால்
முற்றிலும் பொருள் மாறிப் போகும்.

எழுத்துப் பிழையில்லாமல் எழுதுதல்
சவாலான ஒன்று.
நம்மில் பலர்  வல்லின றகரத்திற்குப் 
பதிலாக இடையின ரகரம்
போட்டு எழுதி விடுவோம்.
வறுமை என்று எழுதுவதற்குப் பதிலாக
வருமை என்று எழுதிவிடுவோம்.

அக்கறை என்பதற்குப் பதிலாக
எனக்கு உன்மீது அதிக அக்கரை உள்ளது 
என்று எழுதி அனுப்பிவிடுவோம்.
வாசித்துப் பார்த்தவர் அது என்ன நம்மீது
அக்கரை இருக்கிறது என்று எழுதி
இருக்கிறார். ஆற்றங்கரையா? 
குளத்தங்கரையா ? எனத் தேடுவார்.

இதுகூட பரவாயில்லைங்க....
சட்டையில் கறை உள்ளது
என்பது கூட தெரியாமல் கரையைப்
போக்க நல்ல  சோப்பு எது என்று
எழுதி ஐயம் கேட்டவர்களும் உண்டு.

சோப்பால் கரையைப் போக்க முடியுமா? 

சிரிப்பாக இருக்கிறதல்லவா...?.நாம்
மட்டும் என்னவாம்...இதைவிட மோசமாக
எழுதி ஆசிரியரிடம் வாங்கி 
கட்டியவர்கள்தானே!

இப்போ அதற்கு என்ன ....?

ஒன்றுமில்லையப்பா...பழைய நினைவுகளில்
கறைந்து போய்விட்டேன்...ஐயையோ
தப்பாக சொல்லிவிட்டேன்.
கரைந்து போய்விட்டேன்.

கரைந்து போனதெல்லாம் போதும்.
கறவாமல்  மயங்கொலி சொற்களுக்கு வாருங்கள்
என்ற உங்கள் குரல் கேட்கிறது.

என்ன...கறவாமலா...?.நான் என்ன
பாலா கறக்கிறேன்?

கரவாமல் என்று சொல்ல வேண்டும். 
கரவாமல் என்றால்
மறைக்காமல் என்று பொருள்.

பாருங்கள் இந்த 'ற' மற்றும் 'ர'
படுத்தும் பாட்டை....குழப்பமாக
இருக்கிறதல்லவா?

 ற. , ர.  வேறுபாடு
பற்றிய ஒருசில செய்திகளை 
அறிந்து கொள்வோமா!

பயிற்சி   -பயிற்ச்சி- பயிர்ச்சி
வரையரை - வரையறை 

இவற்றுள் எது சரி?
எது தவறு என்று கண்டறிவதில்
பலருக்கு குழப்பம் ஏற்படலாம்.
    
 முதலாவது றகரம் மற்றும் ரகரம் 
வரும் இடங்களை நன்றாக அறிந்து 
வைத்திருந்தால்  போதும்.
எளிதாக சரியான சொல் எது என்பதைக்
கண்டுபிடித்துவிடலாம்.
 
வாருங்கள். றகரம் ரகரம் ஆகிய இரண்டு
எழுத்துகள் வரும் இடங்கள் 
எவை எவையென அறிவோம்.

 றகரம் மற்றும் ரகரம் வரும் இடங்கள் :

1. றகர மெய் தன் மெய்யோடு சேர்ந்து வரும்.
 அதாவது ற் என்ற எழுத்தின் பின்னால்
வரும் எழுத்து ற, றா... என்று அதன்
வருக்க எழுத்தாக மட்டுமே இருக்கும்.
       
           பதற்றம்
           குற்றம்,      
           விற்றான் 
           மற்றவை  
           கொற்றவன்
           செற்றம்
           
2. ரகரம் தன் மெய்யோடே சேர்ந்து வராது.
அதாவது ர் என்ற எழுத்துக்குப் பின்னர்
ர, ரா...போன்ற அதன் வருக்க எழுத்துகள்
வராது.
             
            சேர்க்கும்  
            சேகரம்
            
  3.   றகரம் னகர மெய்க்குப் பின் வரும்.
அதாவது  ன் என்ற எழுத்துக்குப் பின்னர் 
ற, றா...போன்ற அதன் வருக்க எழுத்துகள்
வரும்
       
குன்றம் 
குன்றோன்
நன்றாய்
தின்றான்
 கன்று
 மன்றம்
             
4.    ரகரம் னகர மெய்க்குப் பின் வராது.

கொன்றை 
கொன்ரை என்று எழுத முடியாது.

 சான்றோர்  என்று எழுதலாம்.
சான்ரோர் என்று எழுதினால் தவறாகும்.
மன்றம் என்று எழுதலாம்.
மன்ரம் என்று எழுதினால் தவறாகுமே !

5.  றகரமும் ரகரமும் சொல்லின் 
முதல் எழுத்தாக வராது.

 ரோமம் - உரோமம் 
ராமன்-   இராமன் 

6. றகர மெய் சொல்லின்
 ஈற்றெழுத்தாக வராது.

 பற  என்று சில சொற்றொடர்கள்
 முடிவது போல எழுதப்பட்டிருக்கும்.
                     
 ஆனால் அது  முற்றுபெற்ற சொல்லாகாது.

"களவும் கத்தும் மற"
என்பார்கள். இதுவும் முற்றுப்பெறாத
சொல்தான்.

7.   றகரத்திற்கு னகரம் இன எழுத்தாகும்.
    . 
 அதனால்தான் நெடுங்கணக்கில்
 றகரமும் னகரமும் அடுத்தடுத்து 
 வைக்கப்பட்டுள்ளன.
அதனால் னகரத்தை அடுத்து
றகரம் வரும்.
பன்றி
அன்றில்
அன்றாடம்
சான்றோர்

8. றகர மெய்க்குப் பின் க, ச ,ப 
ஆகிய உயிர்மெய் எழுத்துகள் வரும்.

கற்க
பற்கள்
கற்கண்டு
கற்பவை
பற்பசை
கற்பூரம்
மற்போர்
கற்சாடி

9.   ரகர மெய்க்குப்பின் 
 க , ங , ச , ஞ , த , ந  ,ப , ம , ய , வ  
 என்னும் பத்து  உயிர்மெய் எழுத்துகளும் வரும்.
நரகம்
மரக்கால்
பம்பரம்
பஞ்சரம்
பார்வதி
சரகம்


10.  ரகர மெய் தனி உயிர் குற்றெழுத்தின் 
பின் வராது.
அதாவது அ ,இ , உ, எ , ஒ ஆகியவை 
தனி உயிர்குற்றெழுத்துகளாகும்.
அதாவது உரம் என்று வரும்.
 உர் ,அர்  ,இர் ,எர், ஒர்....இப்படி மெய் 
 எழுத்தோடு எழுத முடியாது.

 
 ஊர்
 ஆர்வம்
 ஈர்க்கு  ...
 இப்படி   நெடில் எழுத்துகளோடு 
சேர்ந்து வரும்.


க , கி  ,  கு , க, கெ  , கொ... தனி 
உயிர்மெய் குற்றெழுத்துகள்.

11. றகர மெய்க்குப்பின் மெய்யெழுத்து வராது.
 இதில்தான்  தவறாக எழுத
வாய்ப்பு உள்ளது.

பயிற்ச்சி -   என எழுதுவது தவறு.
   
அதற்க்கு,   வரவேற்ப்பு என எழுதுவதும் தவறு.
    
பயிற்சி, அதற்கு , வரவேற்பு
என எழுதுவதுதான் சரி.


வரையறை என்பது  சரி.

வரையறை என்றால்
எல்லை, அளவு , வரம்பு போன்ற 
பொருட்களில் வரும்.

வரையரை என்பது தவறு.

இப்படி சில அடிப்படை விதிகளை முதலாவது
தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும்.
பெரும்பாலான சொற்களில் தவறு
இல்லாமல் எழுதலாம்.

சொற்களின் பொருள் வேறுபாடு
தெரிந்து வைத்திருந்தால் பிழையின்றி
எழுத முடியும்.
    
பொருள் அறிக

 அரம்   _  கருவி 
அறம்   _  தருமம் 

அரவு    _  பாம்பு 
அறவு    _    அறுத்தல்,  தொலைத்தல் 

அரன்      _   சிவன்
அறன்       _ தர்மம்  ,  அறக்கடவுள் 

அக்கரை  _   அந்தக் கரை 
அக்கறை   _    ஈடுபாடு,கவனம்

அப்புரம்       _ அந்தப் பக்கம் 
அப்புறம்       _    பிறகு 

அர்ப்பணம்      _  உரித்தாக்குதல்
அற்பணம்     _   காணிக்கை செலுத்துதல் 

அரு                   _  உருவமற்ற 
அறு                  _  அறுத்துவிடு 

அருமை             _  சிறப்பு 
அறுமை        _     நிலையின்மை , ஆறு

ஆர                   _ நிறைய.  ,  அனுபவிக்க 
ஆற                   _  சூடு குறைய  

இரக்கம்            _   கருணை 
இறக்கம்.           _    சரிவு,     மரணம் 

இரை              _ உணவு.  ஒலி
இறை             _    கடவுள்,    உயரம்


இரு                  _ இரண்டு,   உட்கார் , பெரிய  
இறு                  _   ஒடி  ,  கெடு.  , சொல்லு.   

உரைப்பு         _       தங்குதல் , தேய்த்தல் 
உறைப்பு         _  காரம் 

கரம்                _  கை.  , கழுதை.   ,   விஷம்
கறம்                 _   கொடுமை , வன்செய்கை

கரவு                _     பொய் ,   வஞ்சனை , மறைவு 
கறவு                 _     கப்பம் 

கரவை             _    கம்மாளர் கருவி 
கறவை              _    பசு. 

கரி       _   அடுப்புக்கரி   ,  யானை  ,    பெண்கழுதை.   
கறி             _    இறைச்சி.  ,    மிளகு 

கரத்தல்       _    மறைத்தல்
கறத்தல்            _  கவர்தல். ,  பால் கறத்தல்

கருத்து             _    எண்ணம் 
கறுத்து            _   கருநிறங் கொண்டு

கரு                  _ சினை. ,   பிறவி ,   முட்டை.   அணு. 
கறு                  _      சினம்.  ,     கோபம்.  ,     அகங்காரம் 

கரை              _     எல்லை.  ,    ஓரம் 
கறை              _   அழுக்கு.  ,     குற்றம்.

கர்ப்பம்            _  கருவுறுதல்.    
கற்பம்             _  அற்பம்  ,கஞ்சா , ஆயுள் 

கர்ப்பூரம்           _    சூடம்.  ,   பொன்
கற்பூரம்            _    பொன்னாங்கண்ணி 

புரம்                  _   நகர்  
புறம்                  _    வெளியில் 

மாரி                   _    மழை 
மாறி                 _   வேறுபட்டு

ஊர                      _    நகர 
ஊற                    _  சுரக்க 

அலரி               _    ஒரு வகைப்பூ 
அலறி             _      கதறி 

அருந்து            _     குடி
அறுந்து            _   அறுபட்டு 

அருகு               _    பக்கம்
அறுகு                _    ஒருவகைப் புல்

சொரி                _     பொழிதல் 
சொறி               _     அரிப்பு 

வருத்தல்          _      துன்புறுத்தல்
வறுத்தல்         _     காய்கறிகளை வறுத்தல்

குரை               _    நாய் குரைத்தல்
குறை                _  சுருக்கல்

செரித்தல்         _  சீரணமாதல்
செறித்தல்         _    திணித்தல் 

தரி                   _    அணிந்து கொள்
தறி                     _    வெட்டு 

திரை                 _    அலை.   
திறை               _ கப்பம் 

நிரை                 _    வரிசை
நிறை               _    நிறைத்து வைத்தல் 

பரி                      _    குதிரை.   
பறி                   _    பிடுங்கு 

பொரு            _   போர் செய்தல் 
பொறு            _பொறுத்துக் கொள்

பொரி          _    நெல் பொரி
பொறி            _    இயந்திரம்

பெரு            _    பெரிய 
பெறு           _     பெற்றுக்கொள்

துரவு            _    கிணறு 
துறவு             _     துறந்து விடுதல் 

குரவர்             _    சமயப் பெரியவர்கள்
குறவர்         _    பழங்குடி மக்கள்

கூரிய           _     கூர்மையான
கூறிய        _    சொல்லியபடி

கூரை         _  வீட்டின்  மேற்பகுதி 
கூறை           _    புது ஆடை 

பரவை          _   கடல்
பறவை          _    பறக்கும் உயிரினம் 

உரை            _    பேச்சு 
உறை          _    மூடி,  கவசம்

உரு              _   வடிவம்
உறு              _    மிகுதி 
___________________________________________________________________

அறுவருப்பு    _தவறு
அருவருப்பு  _  சரி

உடற்கூறாய்வு  _  தவறு
உடற்கூராய்வு  _ சரி

ஏற்கனவே.  _ தவறு
ஏற்கெனவே  _ சரி

கத்திரிக்கோல்  _ தவறு
கத்தரிக்கோல்  _  சரி

காலாற  _ தவறு
காலார   _ சரி

சில மயக்கும் சொற்களைப் பற்றிய
ஐயம் தீர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
உங்களுக்கு அடிக்கடி பிழைவரும் 
சொற்களை எழுதுங்கள்.
அடுத்த பதிவில் அதற்கான சரியான
சொல்லை எழுதி தெளிவுபடுத்துகிறேன்.

குறிப்பு:

ற் என்ற எழுத்துக்குப் பின்னர்
ஒருபோதும் புள்ளி வைத்த எழுத்து
அதாவது மெய்யெழுத்து வராது.
இதை மட்டும் மனதில் பதிய வைத்துக்
கொண்டால் பெரும்பாலான சொற்களில் ஏற்படும்
தவறுகளைத் தவிர்க்கலாம்.






   
   
    
    
    


   

Comments

  1. பத்திரமாக சேர்த்து வைக்க வேண்டிய பாடம் . இதில் அடிக்கடி சந்தேகம் வரும் . நன்றி

    ReplyDelete
  2. ஐயம் நீங்கி பிழையின்றி எழுத நம்பிக்கையூட்டும் பதிவு.மிகச் சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts