சித்திரமும் கைப்பழக்கம்.....

   சித்திரமும் கைப்பழக்கம்....

ஒரு செயலை நாளும் செய்து வந்தால்
நாளடைவில்  அது பழக்கமாகிப்  போகும்.
பழக்கம்  தொடர்ந்து நடைபெறுமானால்
அது வழக்கமாகிவிடும்.
பழக்கம் வழக்கமாகி அதுவே
பழக்கவழக்கமாகிவிடுகிறது.

நல்லதோ கெட்டதோ எல்லாமே 
பழக்கத்தால் வருவதுதாங்க...

பழக்கம் என்றாலே பழகுதல் ,
பயிற்சி செய்தல் என்பதுதான் பொருள்.

எந்தச் செயலை செய்வதற்கும்
பயிற்சி வேண்டும்.

 பழக்கம் என்பது கற்றல்
 என்றுதான் கொள்ள வேண்டும்.

பழக்க வழக்கம் நாளடைவில்  மரபாக
கடைபிடிக்கப்பட்டு அதுவே
ஒரு செயலாக மாறிவிடுகிறது.
நமது கலாச்சாரம், மரபு எல்லாமே
இவ்வாறு பழக்கவழக்கத்தினால்
வந்தவைதான் என்று கூறுவார்கள்.

பழக்கம் இல்லாவிட்டால் எந்த செயலையும் 
எளிதாகச் செய்ய முடியாது.
பிறந்த கன்று எழும்பி நடக்க முயற்சி செய்யும்.
கால்கள் தடுமாறி கீழே விழும். 
எத்தனை முறை இடறினிலும்
அது தனது முயற்சியை விட்டுவிடுவதில்லை.
நடக்கும் வரை அதன் முயற்சி
தொடரும்.
அதன் பின்னர் வழக்கமாக நடக்கத்
தொடங்கிவிடும்.

சைக்கிள் ஓட்ட வேண்டுமா....?
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி 
எடுத்துக் கொள்கிறோம்.
சமையல் செய்யும் கலையும் பழக்கத்தால் 
வாய்க்கப் பெறுவதுதான்.
பயிற்சி என்கிறோமே அதுதான் பழக்கம்
என்பது இப்போது புரிந்து போயிருக்கும்.

நீச்சல் பழகிக் கொண்டால் எவ்வளவு 
ஆழமான கிணற்றிலும் நீந்த முடியும்.

பள்ளியில் அன்னா ஆவன்னா எழுத 
எத்தனைமுறை எழுதி எழுதிப் 
பழகி இருப்போம்.
படம் வரைய எத்தனைமுறை
அழித்து அழித்துத் திருத்தித் திருத்தி
வரைந்து வரைந்து ஒருவழியாக 
முடித்துவிட்டு நானா இப்படி
வரைந்தேன் என்று பார்த்துப் பார்த்து
ஆச்சரியப்பட்டுப் போயிருப்போம்.

தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து 
அலுங்காமல் குலுங்காமல் நடப்போமே 
அது பிறந்தது முதலே நமக்குத் 
தெரிந்த ஒன்றா?
எல்லாம் ஒரு பயிற்சி தாங்க..
தமிழ்ச் சொற்களும் பல நேரங்களில்
பயிற்சியின்மையால் பிழையாக
உச்சரிக்கப்படுதல் உண்டு.

குளத்தைப் பார்த்து குலம்
என்பதும்
மழையைப் பார்த்ததும் மல வருது
என்பதும்
பள்ளத்தைப் பல்லம்...பல்லம்
என்று சொல்வதும் கேட்பதற்கு
வேடிக்கையாக இருக்கும்.
முறையான பயிற்சி இருந்தால்
தவறு வராது.அதனால்தான்
நாநெகிழ்ப் பயிற்சிக்கான
சொற்றொடர்களைப் பள்ளிகளில்
சொல்ல வைப்பார்கள்.
அப்படி முறையான பயிற்சியால்
வந்ததுதான் இந்தத் தமிழ்ப் பேச்சு.

கல்வியா எனக்கு வராது...
கணக்கா? 
கணக்கைக் கண்டாலே நான்
காத தூரம் ஓடுவேன்.
இப்படிக் கூறுகிறீர்களா?
இனி அப்படியெல்லாம்
கூறமுடியாது.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.
மனம் வைத்துப் படித்தால் கல்வியும்
பழக்கமாகிப்போகும்.
நல்லமுறையில் படிக்க முடியும்.

 நம் நடைமுறைகள் யாவும்
மேற்கொள்ளுவதும் பழக்கத்தினால்
வருவதுதாங்க...
அதிகாலையிலேயே எழுந்து நடப்பது
ஆரோக்கியத்திற்கு நல்லது.
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்
என்று கையைக் காலை முடக்கித்
தூங்கினால் பழக்கம் ஏற்படாது.
காலையிலேயே எழும்பி நடைப்பயிற்சி
செய்யுங்கள் .உடலினைப் பேணும்
நல்லொழுக்கம் வந்து சேரும்.
உணவில் ஒரு ஒழுக்கம் கடைபிடிக்கப்பட
வேண்டும். பேச்சில் ஒரு ஒழுக்கம்
கடைபிடிக்க வேண்டும். நம் நடைமுறையில்
ஒரு ஒழுக்கம் இருக்க வேண்டும்.
இந்த ஒழுக்கம் ஒரே நாளில் வந்துவிடாது.
பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின்னர் அது பழக்கவழக்கமாகி
நம்மோடு ஒட்டிக் கொள்ளும்.

அப்படியானால்  எல்லாப் பழக்கவழக்கத்தையும்
ஏற்படுத்திக் கொள்வது நம்
கையில்தான் இருக்கிறது இல்லையா ?

தொழில்களில் பழக்கத்தை 
ஏற்படுத்தி விடலாம். 

ஆனால் குணத்தில்.....
அதுதாங்க முடியாது என்கிறார் ஔவை.
இவற்றை எல்லாம் பழக்கப்படுத்திக்கொள்ள 
முடியும்.ஆனால்   பிறவிக் குணத்தால்
வாய்க்கப்பெறுவனவும் சில உண்டு 
என்கிறார்.
 
நம்மால் கூடாததும் உண்டோ?
அதுதாங்க பிறவிக் குணத்தால்
வருவதை பயிற்சியால் பழக்கப்
படுத்திக் கொள்ள முடியாதாம்.

பிறவிக்குணம் என்றால் தப்பாக 
எடுத்துக்கொள்ளக் கூடாது.
 பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு
வருவதுதான் பிறவிக் குணம்.

 நட்பு, தயை, கொடை ஆகிய மூன்றும்
பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குத்
தானாக வருவதாம்.

இதைத்தான் பிறவிக்குணம் என்கிறார்
ஔவை.

நம் வீட்டுக்கு வந்து போகும்
அப்பாவின்  நண்பர்கள், அவர்களின்
பேச்சு இவை யாவும் நம்மையும் அறியாமலேயே
நமக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தும். 
அந்தக் குரல்கள் மாறிமாறி
நம் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பெற்றோர் நல்லவர்களோடு நட்பு
கொண்டிருந்தால் பிள்ளைகளுக்கும்
நல்லவர்களோடு பழகும்
நற்பண்பு ஏற்படும்.
மாறாக தீய நட்பு பெற்றோருக்கு
இருக்குமானால் பிள்ளைகளிடம்
நல்லவர்களோடு பழகவேண்டும்
என்ற பண்பு இயல்பாகவே இல்லாமல்
போய்விடும்.

இரண்டாவதாக தயை அதாவது இரக்க குணம்.
இதுவும் பெற்றோரிமிருந்து வருவதுதான்.
பெற்றோர் கடின இதயம் உள்ளவர்களாக
இருந்தால் பிள்ளைகளிடமும் நாம்
இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது.

மாறாக பெற்றோர் இரக்க சிந்தை 
உள்ளவர்களாக இருந்தால் அதனைப்
பார்த்துப் பார்த்து வளரும் குழந்தைக்கும்
இயல்பாகவே கருணை உள்ளம்
வந்துவிடும்.நம் கண்முன்னே
நடக்கும் செயலைப் பார்த்துப் பார்த்துதான்
குழந்தைகள் வளருவார்கள்.
போலச் செய்தல் என்னும் பண்பு
குழந்தைகளுக்கு நிறையவே உண்டு.
பெற்றோர் செய்வது போலவே
தாங்களும் செய்ய வேண்டும்
என்று நினைப்பார்கள்.
அதனால்தான் அவர்களின் குணநலன்கள்
அப்படியே நம்மை வந்து
தொற்றிக் கொள்கிறது.

மூன்றாவதாக கொடை. 
இதுவும் பெற்றோரைப் பார்த்து
வளரும் பண்புதான்.
பெற்றோர் அறுத்த கைக்குச்
சுண்ணாம்பு வைக்காதவர்களாக
இருந்தால் பிள்ளை வள்ளலாக
இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க
முடியாது.
முன் கை நீண்டால்தான் முழங்கை
நீளும் என்பார்கள்.
நம் முன்னோர் கொடுத்துப் பழக்கப்
படுத்தி இருந்தால்தான் நமக்கும்
கொடுக்க வேண்டும் என்ற பண்பு வரும்.
"இருக்கிறதை எல்லாம் தானதருமம் 
பண்ணிவிடக்கூடாது... எல்லோரும்
ஏமாற்றுக்காரர்கள்....யாரையும் நம்பி
விடக்கூடாது "என்று வீட்டிற்குள்
பேசிக் கொண்டிருந்தால் குழந்தைகள்
மனதிலும் அது அப்படியே 
பதிந்துவிடும்.
உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம்
ஏமாற்றுக்காரர்கள் என்று ஒரு
மனக்கணக்குப் போட்டு வைத்துவிடும்.

இப்படிப்பட்ட சூழலில் வளரும் 
குழந்தைகளுக்குத் தானம் செய்யும்
பண்பு எப்படி வளரும் ?
இப்படி வளரும் குழந்தைகள்தான்
பெரியவர்கள் ஆனதும் தன்
பெற்றோருக்குக் கொடுப்பதற்கும்
கணக்குப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

பெற்றோர் பிச்சைக்காரர்களுக்குக்
கொடுத்தால் மறுநாள் அந்தவழியாக
வரும் குழந்தையின் கை தானாக
கொடுப்பதற்கு நீளும்.
இது இயல்பு.

நாம் விதைத்ததுதான் விளையும்.

இதைத்தான் ஔவை,
         
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்

 நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

 கொடையும் பிறவிக் குணம் "

என்று  கூறுகிறார். 
சித்திரம் வரைய வேண்டுமா..?..
நாளும் நன்றாக வரைந்து பாருங்கள்.

நல்ல தமிழ் பேச வேண்டுமா....?
சொற்களை அதன் உச்சரிப்புக்கு
ஏற்றபடி நாளும் சொல்லிச்
சொல்லிப்  பழகுங்கள்.

கல்வி கற்க வேண்டுமா.... ?
திரும்ப திரும்ப படித்து மனப்பயிற்சி    
எடுத்துக் கொள்ளுங்கள்.

நல்ல பழக்க வழக்கங்களைக் 
கற்றுக்கொள்ள வேண்டுமா?
அவற்றைப் பழக்கப்படுத்திக்
 கொள்ளுங்கள்.

ஆனால்  நட்பு , இரக்கம், கொடை போன்ற 
 நற்பண்புகள்  மட்டும் உங்கள்
பெற்றோரிடமிருந்து உங்களுக்குக்
கிடைக்கும் கொடை. அதனைப் 
பெற்றோரைத் தவிர வேறு யாரும்
வலிந்து ஊட்டி விட முடியாது 
என்கிறார் ஔவை

நட்பு, தயை, கொடை இதெல்லாம்
பிறவிக் குணமா?
 

Comments

  1. மிக அருமையான பதிவு.வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தவறான விளக்கங்கள் உள்ளன, நடைப் பழக்கம் என்பது நடை பயிற்சி அல்ல.. மனிதன் எப்படி ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே...
    மேலும் மனித உயிரினத்தின் பிறவிக் குணம் என்பதை முறையே முதலில் ""நட்பு"", மிகச் சிறுகுழந்தையிடமும் இயல்பாக உள்ளது அடுத்தது ""தயை"" உதவ வேண்டும் என்ற எண்ணமும், உள்ளமும், நட்பு என்ற பிறவிக் குணம் கெடாமல் வளரும் போது வருவது.. மூன்றாவது நிலை கொடை முதலிரண்டு நிலை கெடாது வளரும் போது தன் உழைப்பால் பிறருக்கு ஊட்டும் கொடை..இது எல்லோர் வாழ்விலும் இல்லறம் எனும் நல்லறம் தொடங்கும் போதே இயல்பாய் இருப்பது. மற்றவருக்கும் கொடுப்பது அதனுடைய வளர்ச்சி நிலையே

    ReplyDelete
  3. உங்களின் தன்னம்பிக்கை வார்த்தைகளில் சிறப்பான தமிழ் நடை.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular Posts