யோனாவும் ஆமணக்குச்செடியும்

      யோனாவும் ஆமணக்குச் செடியும்

                          நாடகம்

                         காட்சி  இடம்  : யோனாவின் வீடு

உறுப்பினர்கள்  :  யோனா

கர்த்தர்   : யோனாவே !  யோனாவே !

யோனா  : இதோ இருக்கிறேன் ஆண்டவரே!
            சொல்லும் ....அடியேன் கேட்கிறேன்.

கர்த்தர்   : நீ எழுந்து நினிவே பட்டணத்துக்குப் போ...
அவர்கள் அக்கிரமக்காரர்களாக மாறிக்
கொண்டிருக்கிறார்கள்.

யோனா :  ஆம் ஆண்டவரே! நினிவே மக்கள் 

மூர்க்கர்கள் என அறிந்திருக்கிறேன்.

கர்த்தர்  :  அதனால்தான் உன்னை
நினிவேக்குப் போகச் சொல்கிறேன்.நீ நினிவே
பட்டணத்துக்குப் போய்
இப்படியே அக்கிரமம் தொடர்ந்தால்
நினிவேயை அழித்துப் போடுவேன் என்று சொல்.

யோனா :  கர்த்தர் நினிவே மக்களை
அழித்துப்போட சித்தம்
கொண்டீரோ !
கர்த்தர் தாமே இரக்கமும் மன உருக்கமும்
உடையவர் என்பதை யான் அறிவேன்.

கர்த்தர் :  அக்கிரமம் அதிகமாகும்போது தேவ
கோபத்திற்குள்ளாக்கப்படுவீர்கள் என்பது
தெரியுமல்லவா !

யோனா : தெரியும்....இந்த மக்கள்மீது
இரக்கம் காண்பியாது இருப்பீரோ !

கர்த்தர்   :   அந்த இரக்கத்தின்
நிமித்தமே அவர்களை எச்சரிக்கிறேன்....
நீ போய் நான் சொல்லுவதைச் சொல் .

யோனா : உங்கள் கட்டளைக்குக்
கீழ்ப்படியாதிருந்தேனோ!

    ( ஆனால் யோனா நினிவேக்குச் செல்லாமல்
    தர்ஷீசுக்குச் செல்லும் கப்பலில் ஏறுதல்)
                     காட்சி   இரண்டு

இடம்  : கப்பல்
உறுப்பினர்கள்  : மாலுமி , யோனா ,பிரயாணிகள்

யோனா : எப்படியோ தப்பித்து வந்துவிட்டோம்.
அல்லது அந்த மூர்க்கர்களிடம் போய்
மாட்டியிருப்பேன்.

சிப்பந்தி :  எல்லோரும் அவரவர் இடத்தில் போய்
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

யோனா : தனியாக போய் நிம்மதியாக ஒரு
தூக்கம் போட்டுவிட வேண்டியதுதான்.

(யோனா கப்பலின் கீழ்த்தளத்தில் போய் தூங்குதல் )

மாலுமி  : என்ன  திடீரென்று கடல் ஒரே
கொந்தளிப்பாக இருக்கிறது....

துணை மாலுமி :  சுனாமி அலை போல் அலைகள்
மேல் எழும்பி வருகின்றன...
கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ
என்று  அச்சமாக  இருக்கிறது.

மாலுமி..: அச்சப்பட வேண்டாம்...முடிந்த
மட்டும்  பாதுகாப்பாகச் செலுத்த
முயற்சி செய்கிறேன்.

துணை மாலுமி :  கேப்டன் இப்போது
வேறு ஏதும் வழி இல்லையா.?..

மாலுமி : இருக்கிறது... கொஞ்சம் பாரத்தைக்
குறைத்தால் கப்பல் இயல்பு நிலைக்குத்
திரும்பும் என்று நினைக்கிறேன்.

துணை மாலுமி : அப்படியானால் உடனே போய்
எல்லோருடைய பொருட்களையும்
  கடலில் வீசச் சொல்கிறேன்.

துணை மாலுமி  (பயணிகளிடம் சென்று ):
எல்லாரும் வைத்திருக்கும் பொருட்களை தூக்கி
கடலில் வீசுங்கள். அல்லது கப்பல் கவிழ்ந்துவிடும்.

பயணி  : அது எப்படி முடியும்? பயணத்திற்குத்
தேவையான முக்கியமான பொருட்கள்
மட்டுமே எங்களிடம்  இருக்கின்றன.

துணை மாலுமி : கப்பல் மூழ்கப் போகிறது....
இப்போது நீங்கள் பொருட்களை வீசவில்லை
என்றால்  எல்லோரும் மொத்தமாக
கடலில் மூழ்கி சாக வேண்டியதுதான்.

பயணி :  ஐயோ..வேண்டாம்...வேண்டாம்
பொருட்களை வீசி விடுகிறோம்.....ஏய்...
அவரவர் பொருட்களைத் தூக்கி கடலில் வீசுங்கள்.

(பொருட்களைத் தூக்கி கடலில் வீசுதல்)

மாலுமி : எல்லோரும் பொருட்களை வீசி விட்டார்களா...

துணை மாலுமி  : எல்லா பொருட்களும் போட்டாயிற்று  .
ஆயினும் கப்பல் மேலும் கீழும் ஆடுவதைப்
பார்த்தால் எனக்கென்னவோ
பயமாகத்தான் இருக்கிறது!

மாலுமி  :  ஐயோ...என்னால் உங்களை காப்பாற்ற
முடியாமல் போய்விடுமோ என்று எனக்கும்
நேரம் ஆக ஆக அச்சமாகத்தான்
இருக்கிறது....
இது என்ன ....ஒருநாளும் இல்லாத கடல் சீற்றம்...
ஒன்றுமே புரியவில்லையே!
.
துணை மாலுமி.  :  இன்னும் எங்காவது பாரம்
இருக்கிறதா என்று கப்பல் முழுவதும்
தேடிப் பார்க்கிறேன்...

மாலுமி.: அதைச் செய்யுங்கள்....
முடிந்த மட்டும் முயற்சி
செய்து பார்ப்போம்.

(கப்பலின் கீழ்க்களத்திற்கு ஓடினார். அங்கே...)





துணை மாலுமி  : ஏய்... யாரது...எழும்பு...
எழும்பு.

யோனா ( ஒன்றும் தெரியாதவன் போல)   :
என்ன ...என்னாயிற்று...

துணை மாலுமி( கோபமாக ) : கப்பல் கவிழப்போகிறது.
நாங்களெல்லாம் சாவா...வாழ்வா என உயிரைக்
கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். நீ இங்கே
நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறாய்....

யோனா  : நான் எழும்பி இருந்தால் கப்பல்

கவிழாதா?

துணை மாலுமி : ஏதாவது பொருள் இருந்தால்

கடலில் தூக்கி வீசிவிடு....
அல்லது நீயும் சேர்ந்துதான் சாகப் போகிறாய்..

யோனா : என்னிடம் எந்தப் பொருளும்
இல்லை என்கிறேன்.
மறுபடியும் மறுபடியும் போடு போடு என்றால்
என்னைத்தான் தூக்கிப் போட வேண்டும்.

துணை மாலுமி : போதும்...போதும்...
நீ இங்கே தனியாக இருக்க வேண்டாம்.
மேலே வா.... அங்கு வந்து எல்லோரிடமும்
சேர்ந்து இரு.

(யோனா மாலுமியோடு செல்ல... அங்கே....பயணிகள்...)

பயணிகள்.( ஜெபித்தபடி)  :   ஆண்டவரே ! என்ன இது...
ஏன் எங்களைச் சோதிக்கிறீர்....நாங்கள் ஒரு பாவமும்
அறியோமே !

துணை மாலுமி  (மாலுமியிடம் போய் ):
எல்லா பொருட்களையும் தூக்கி வீசியாச்சு...
அப்புறமும் கப்பல் மூழ்குவது போல் இருக்கிறதே...

பயணி. 1. : யார் செய்த பாவமோ நம்ம எல்லாருடைய
தலையிலும் வந்து விடியப் போவுது....

மாலுமி  : எல்லோரும் இங்க வாங்க .....
எனக்கு என்னவோ...இது கடவுளுடைய கோபம்
போல்தான்  தெரிகிறது.

துணை மாலுமி : இதற்கு ஒரே வழி
கடவுளிடம் வேண்டிக்கொள்வதுதான்.
வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

மாலுமி " : சீட்டு குலுக்கிப் போட்டு பார்க்க
வேண்டியதுதான்...
அப்போதுதான் யாரால் இது நிகழ்கிறது
என்பது தெரிந்துவிடும்.

துணை மாலுமி : எனக்கும் அதுதான் சரி
என்பதுபோல் தெரிகிறது.

மாலுமி  : உடனே பெயர்களை
எழுதிக் கொண்டு வாருங்கள்...

துணை மாலுமி :(சீட்டு குலுக்கிப் போட்டபடி)  :
யாராவது ஒருவர் வாருங்க ஒரு சீட்டு எடுங்க...

(பயணி ஒருவர் சீட்டை எடுத்து  மாலுமியிடம் கொடுத்தல் )

மாலுமி ( சீட்டைப் பிரித்துப் பார்த்தபடி ):
யோனா....யாரது யோனா....

யோனா.:   நான்தான்...யோனா..

மாலுமி : உன் பெயர்தான் வந்திருக்கிறது....நீ ஏதாவது
தப்பு செய்தாயா ?

பயணி  1.:  பாவி...நீ யார் ? எங்கிருந்து வருகிறாய் ?

பயணி 2.: உன் வேலை என்ன?இப்போதே சொல்.

பயணி  3. : உன் சாதி என்ன ?

யோனா : நான் எபிரேயன்...என் நிமித்தம்
இது நிகழ்கிறது என்று எப்படி சொல்கிறீர்கள்?

மாலுமி : இதோ சீட்டு உன் பெயரில்தானே
விழுந்திருக்கிறது?
இதற்கு என்ன பதில்?

யோனா : நான் கர்த்தர்மேல் பயபக்தியான மனிதன்.
                   எந்தப் பாவமும் செய்யாதவன்.

மாலுமி :  அது இருக்கட்டும்... நீ இப்போது எங்கே செல்கிறாய்?

யோனா : நான் தர்ஷீசுக்குச் செல்கிறேன்.

மாலுமி : வேலை நிமித்தமாகவா?

யோனா : இல்லை எனக்கு தர்ஷீசில் எந்த வேலையும் இல்லை.

மாலுமி : எந்த வேலையும் இல்லாமல் தர்ஷீசை
நோக்கிப் போகக் காரணம் ?

யோனா :  சொல்லத் தெரியவில்லை.

மாலுமி : சொல்லத் தெரியவில்லையா...இல்லை சொல்லக்
கூடாது என்று மறைக்கிறீரா ?

  யோனா : எதையும் மறைக்கும் நோக்கம்
  எனக்கு இல்லை.

மாலுமி : அப்படியானால் உண்மையைக் கூறிவிடு..
நாங்கள் உம்மை விட்டுவிடுகிறோம்.

யோனா : என்னை கடலில் போட்டால்தான் உங்களால்
பாதுகாப்பாக செல்ல முடியும் என்றால்...
என்னை நீங்கள் விட்டுவிட வேண்டாம்...
என்னை கடலில் தூக்கிப் போட்டுவிடுங்கள்.
அப்போதாவது இந்தக் கடல் அடங்குகிறதா
என்று பார்ப்போம்.

பயணி 2 : இந்த மனிதன்
ஏன் இப்படிப் பேசுகிறான் ?

பயணி 1 : அதுதான் எனக்கும் புரியவில்லை.

பயணி 3: உன்பிரச்சினைதான் என்ன ?

யோனா : கர்த்தர் என்னை நினிவே பட்டணத்திற்குப்
போகுபடி கட்டளையிட்டடார்.
நான் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல்
நினிவே பட்டணம் செல்வதற்குப்
பதிலாக தர்ஷீசுக்குப் புறப்பட்டு
வந்துவிட்டேன்.அதனால்
தேவ கோபத்திற்குள்ளாகி இருப்பேனோ என
அச்சப்படுகிறேன்.

மாலுமி. :   தேவனுக்குக் கீழ்ப்படியாமைக்குக்  காரணம்...

யோனா :  போகப் பிடிக்கவில்லை....
அந்தப் பட்டணம் அழிவதை என்னால்
பார்க்க விருப்பம் இல்லை...
இப்போது என்னின் நிமித்தமே
இந்த கடல் கொந்தளிப்பு  என்பதை  மட்டும்
என்னால் உணர முடிகிறது.

பயணி 2.: இப்போது  நீ மட்டுமல்ல... நாம் அனைவரும்
தேவ கோபத்திற்கு ஆளாகிவிட்டோமே ...
இதிலிருந்த தப்ப என்னதான் வழி ?

மாலுமி  : ஆமாம்... இப்போது இதற்கு தீர்வுதான் என்ன....

யோனா  :  என்னைத் தூக்கிக் கடலில் போடுங்கள்.
அதுதான் இதற்கான தீர்வு....
என்னால்தானே இந்த கடல் கொந்தளிப்பு....
இந்தக் கடலுக்கு நானே இரையாகி விடுகிறேன்.

பயணி:1 :  அப்படி செய்துவிட நாங்கள்  எல்லாம்
இரக்கம் இல்லாதவர்களா ! 

மாலுமி : ஏதோ ஒரு கோபத்தில் பேசி விட்டோம்....
இதைத் தவிர வேறு  ஏதேனும் மாற்றுவழி
உண்டா எனப் பார்ப்போம்....

யோனா :  நான் கடவுளுக்கு எதிராக நடந்து
கொண்டேன்...நான் பாவி...என்னை தூக்கிப்
போடுங்கள்....கடல் கொந்தளிப்பு அடங்கும்.
நீங்கள் பத்திரமாக உங்கள் ஊர்களுக்குச்
செல்லலாம்.

பயணி 1 : இவன் சொல்வதால் அப்படி செய்யக்கூடாது...
அது பாவம்....

பயணி 2 : கேப்டன்...பக்கத்தில் ஏதாவது
தீவு ஏதேனும் தெரிகிறதா என்று பாருங்கள்....
தயவுசெய்து சீக்கிரமாக கரை இறங்க
முயற்சி செய்யுங்கள்.

மாலுமி :  நானும் அதற்காகத்தான் இவ்வளவு நேரம்
போராடிக் கொண்டிருக்கிறேன்.
(  காற்று வேகமாக வீச )

துணை மாலுமி  :  ஐயோ ...முன்பைவிட வேகமாக
காற்று வீசுகிறதே !

பயணி 3 :: ஆண்டவரே!  இந்த ஒரு மனிதனுக்காக
எங்களைத் தண்டித்து விடாதேயும்....நாங்கள்
உமக்கு எதிராக எந்த குற்றமும் செய்யவில்லையே !

துணை மாலுமி : இப்படியே பேசிக் கொண்டிருந்தால்
நாம் எல்லோரும் சாகத்தான் போகிறோம்..

யோனா : என்னைக் கடலில் தூக்கி வீசுங்கள்...
நீங்களாவது பிழைத்துக் கொள்ளலாம்.

பயணி:4 :ஆண்டவரே ! உமது சித்தம் அதுவாக
இருந்தால் அதற்கு குறுக்கே நிற்பவன் யார்?
இதோ இந்த மனிதன் உமது கட்டளைக்குக்
கீழ்ப்படியாதிருந்தான்...

(  எல்லோருமாக சேர்ந்து
யோனாவைக் கடலில் தூக்கி வீசுதல்)

(மீனின் வயிற்றுக்குள் யோனா)

யோனா : ஆ...கர்த்தாவே என்ன இது
ஒரே இருட்டாக இருக்கிறது....
மீனுக்கு இரையாகிப் போனேனா....

ஆண்டவரே! என்னை தண்ணீரில்
மூழ்கடித்தாலும்
உமக்கு எதிராக  இனி எதுவுமே
செய்ய மாட்டேன்

( மூன்று நாட்கள் கழித்து )


யோனா..:  ஆ...மறுபடியும் நினிவே பட்டணம்
வந்து விட்டேனா....
இந்த மூர்க்கர்கள் என்னை என்ன
செய்யப் போகிறார்களோ ?
என்ன நடக்கப் போகிறதோ....
ஒன்றுமே புரியவில்லையே...

கர்த்தர்  : யோனாவே ! ...யோனாவே !

யோனா  : ,இதோ  இருக்கிறேன் ...ஆண்டவரே!

கர்த்தர்  : நீ எழுந்து நினிவே பட்டணத்திற்குள்
போ ...
அவர்களுக்கு விரோதமாக தேவகோபம்
இறங்கி இருப்பதால் நாற்பது நாளில்
நினிவேவை அழிக்கச் சித்தம்
கொண்டுள்ளேன் என்பதைச் சொல்.

யோனா..: இதோ...அப்படியே செய்கிறேன்
ஆண்டவரே!

                  காட்சி  மூன்று

இடம் : நினிவே பட்டணம்

உறுப்பினர்கள் : நினிவே மக்கள், யோனா

யோனா :(நினிவே மக்களைப் பார்த்து):
உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.
உங்கள் அக்கிரமத்தின் நிமித்தம்
நாற்பது நாளில் நினிவே பட்டணத்தை
அழித்துப்போட கர்த்தர் சித்தம் கொண்டுள்ளார்.

மக்கள்1 : நீர் எதை வைத்து இவ்வாறு கூறுகிறீர் ?

யோனா : உங்களிடம் அதைத் தெரிவித்து
வரவே கர்த்தர் என்னை
அனுப்பி வைத்துள்ளார்.

மக்கள் 1: ஐயோ ....நாங்கள் எல்லாம்
அழியப் போகிறோமா ?

மக்கள் : 2: எங்கள் மிருக ஜீவன் எல்லாம்
அழியப்போகின்றனவா. ..
எங்கள் அக்கிரமத்தின் நிமித்தம்
தேவ கோபத்திற்கு
ஆளாகிவிட்டோமா....
இதற்கு என்னதான் வழி.....

மக்கள் 3 : தேவன் மன இரக்கம் உள்ளவர்.
அவர் ஒருபோதும் நம்மை அழிக்க
சித்தம் கொண்டவராக இருக்கமாட்டார்.

மக்கள் 2 :
அப்படியானால் இந்த மனிதன் சொல்லுவதுதான்
  என்ன ?

யோனா : நான் கூறியது முற்றிலும் தேவனுடைய
வார்த்தை. இதில் புரட்டு ஒன்றுமில்லை.

மக்கள் : 3.
வாருங்கள்  நாம் கூடி ஜெபிப்போம்.
தேவன் மனதுருக்கம் உடையவர்.
கர்த்தர் ஒருபோதும்  நமக்கு தீங்கு செய்ய
மாட்டார்.

மக்கள் 2 : உபவாசம் இருந்து ஜெபிப்போம்.
கர்த்தர் கண்டிப்பாக நம் வேண்டுதலைக் கேட்பார்.

                    காட்சி  நான்கு

உறுப்பினர்கள் : அரசன் ,தளபதி, அமைச்சர்

தளபதி (மூச்சு இரைக்க ஓடி வந்து)  :  மன்னா!...மன்னா !

மன்னன் :  என்ன ...தளபதியாரே !
இவ்வளவு பதற்றமாக ஓடி வருகிறீர்....

தளபதி  : மன்னா... எல்லாம் போச்சு...

மன்னன் : அப்படி என்ன போய்விட்டது? சற்று
விளக்கமாகவே கூறுங்கள்...

தளபதி : நாட்டு மக்கள் எல்லாம் அச்சத்தோடு
இருக்கிறார்கள்.

மன்னன் : எனது ஆட்சியில் மக்களுக்கு அச்சமா ?
புரியவில்லையே !

தளபதி : நாட்டுக்கே பிரச்சனை வந்திருக்கிறது மன்னா ...

மன்னன்(பதற்றத்தோடு) ,: நாட்டுக்குப் பிரச்சினையா ....
எதிரி நாட்டில் இருந்து ஏதாவது ஓலை வந்ததா....

தளபதி : இல்லை மன்னா... இல்லை..
தெய்வத்திடமிருந்தே  செய்தி வந்திருக்கிறது...

மன்னன் :  தளபதியாரே ! நீர் நன்றாகத்தானே இருக்கிறீர் ..
உமக்குள் குழப்பம் ஏதும் இல்லையே...

தளபதி : ஏதும் இல்லை மன்னா...யோனா என்று ஒரு
எபிரேயன் நம் நாட்டிற்கு வந்திருக்கிறான்...

மன்னன் : எபிரேயன் தானே ... அவனால் நமக்கு
பெரிதாக என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது?

தளபதி : இன்னும் நாற்பது நாளில் நினிவே
தம் அக்கிரமத்தின் நிமித்தம் அழியப்
போகிறது என்று  அந்த மனிதன்
தேவ வாக்கு கூறி இருக்கிறானாம்..

மன்னன் ,( பயந்தவனாக): தெய்வ வாக்கு உரைக்கிறானா!
நமக்கு எதிராகவா....

தளபதி : நாட்டு மக்களிடையே அக்கிரமம்
பெருகிவிட்டது. அதனால் மக்களுக்கு எதிராக
தேவ கோபம்  திரும்பியுள்ளதாம்.

மன்னன் :  தேவ கோபத்திலிருந்து தப்ப ஒரே வழி
இப்போதைக்கு உபவாசம் இருந்து
ஜெபம் பண்ணுவதுதான்.
உடனே நாட்டு மக்களுக்குஅறிவிப்பு கொடுங்கள்.
அனைவரும் தம் அக்கிரமங்களைக்
கைவிட்டு விட்டு உபவாசம் இருந்து ஜெபிக்கட்டும்.

தளபதி : மக்கள் மனதிலும் அதே எண்ணம்தான்
மன்னா...மக்கள் திருந்த இதுதான்
சரியான வாய்ப்பு..

மன்னன் : எனக்கான ஓர் இடத்தை ஆயத்தம் பண்ணுங்கள்.
நானும் சாம்பல் மேல் உட்கார்ந்து உபவாசித்து
ஜெபிக்கட்டும்.
மக்கள்  தம் பொல்லாங்கை விட்டு திரும்பட்டும்.
தேவ கோபம் நாட்டின்மேல் இறங்காதிருக்கட்டும்.

அமைச்சர் : ,கர்த்தர் நம் வேண்டுதலுக்கு
செவி சாயாமல் போவாரோ ?

மன்னன் : யாரும் கலங்க வேண்டாம்..
  நம் ஜெபத்தைக் கேட்டு தேவன்
  கண்டிப்பாக மனதிரங்குவார்.
 
  அமைச்சர் : மன்னா தங்களுக்கான இடம்
  ஆயத்தமாகிவிட்டது.

மன்னன்  : வாருங்கள்...நாம் ஜெபிப்போம்.

 
                   காட்சி  ஐந்து

உறுப்பினர் : யோனா 

யோனா (ஜெபத்தில் ): கர்த்தாவே ! நீர் அனுப்பினீர் 

நான் வந்தேன்.
நீர் சொல்லியதையே நான் சொன்னேன்.
இப்போது இந்த மக்களுக்கு எதிராக நீர்
ஒன்றும் செய்யாதிருக்கிறீர் .

கர்த்தர் : உனக்கு ஏன்  இத்தனை எரிச்சல்... ,?

யோனா  : நான் அப்போதே சொன்னேன்...நீர்
இரக்கம் செய்கிற தேவன் என்று...
அதனால்தான் நான் தர்ஷீசுக்குப் போனேன்.

கர்த்தர் : உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்
என்று நினைக்கிறாய்.?

யோனா : நீர் சொன்னதைச் செய்யவில்லையே!
பின்னர் ஏன் என்னை இங்கு அனுப்பி வைத்தீர்?

கர்த்தர் : இவர்கள் அழிவதைப் பார்க்க வேண்டும்
என்று நினைக்கிறாயா ?

யோனா (:கோபத்தோடு): நான் உயிரோடிருப்பதைவிட
சாவதே மேல் என்று நினைக்கிறேன்.

(யோனா கோபத்தோடு போய்
ஒருகுடிசையைப் போட்டு
நினிவேக்கு நிகழப் போவதை பார்ப்பதற்காக
அங்கே அமர்ந்து கொள்ளுதல் )

யோனா  : ரொம்ப வெயிலாக இருக்கிறது ..
கொஞ்சம் நிழல் இருந்தால்
நலமாய் இருக்கும்.


(  தேவன் ஒரு ஆமணக்குச் செடியை உண்டாக்குதல் )

  யோனா : ஆ... இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு
  உயரமான ஆமணக்குச் செடியா...
  நல்ல நிழல் ....  அப்பப்பா என்ன சுகம்....
  என்ன சுகம் ...

  அங்குமிங்கும் அலைந்து சரியான
  தூக்கமே இல்லை.
  நல்ல நித்திரை வருகிறது....
 
(யோனா ஆமணக்குச் செடியின்கீழத் தூங்குதல் )

( ஒரே நாளில் பூச்சிவந்து மொத்த செடியையும்
தின்றுப் போட்டது.)

யோனா(  நித்திரையிலிருந்து எழும்பி ) :
என்ன திடீரென்று
ஒரே வெப்பமாக இருக்கிறது.
.ஆ.. இங்கே நின்று கொண்டிருந்த
ஆமணக்குச்செடி எங்கே....

  ஆ...என்ன இது ...ஒரே நாளில் செடி எப்படி
  இப்படி மொட்டையாகிப் போனது ....
 
  கர்த்தர்  :  யோனாவே...இந்த ஆமணக்குச்
  செடிக்காகவா  இத்தனை எரிச்சல் அடைகிறாய்..

யோனா : நல்ல நிழல் கொடுத்து வந்த
ஆமணக்குச் செடிக்கு இந்த கதியா !

கர்த்தர் : நேற்று முளைத்த ஆமணக்குக்காக
இவ்வளவு இரக்கம் கொள்கிறாயே !
நான் படைத்த மக்கள்மீது இரக்கம்
காட்டாதிருப்பேனோ?

யோனா..: நல்ல நிழல் தந்து கொண்டிருந்ததே ..
அதற்கு போய்
இப்படி நேர்ந்துவிட்டதே என்றுதான் வருந்துகிறேன்...

கர்த்தர் :  நீ உண்டாக்காத ஆமணக்குச்
செடி மீது இத்தனை இரக்கமும் மனதுருக்கமும்
கொண்டிருக்கும்போது நான்
உண்டாக்கிய இந்த நினிவே மக்களுக்காக
மனதுருகாதிருப்பேனோ.?

யோனா :  ,கர்த்தாவே  என்னை மன்னியும்.
நீர் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும்
உள்ளவர் என்பதை அறிந்திருக்கிறேன்.

நினிவே மக்கள்: ஆண்டவரே எங்களை
மன்னித்தருளும்.
எங்கள் மேட்டிமையின் நிமித்தம்
வழிவிலகிப் போனோம்...
எங்கள் துன்மார்க்கத்தை விட்டு
உம் அண்டை வந்தோம்...
நீர் மன உருக்கமும் நீடிய சாந்தமும்
உள்ள தேவன்....

கர்த்தர் : அந்தபடியே
இனி பாவம் செய்யாதிருப்பீர்களாக!
நான் உருவாக்கிய மக்கள்மேல்
என்றென்றும் எனக்கு இரக்கம் உண்டு.
சமாதானம் உண்டாகட்டும்.












Comments

  1. மிகவும் சுவாரஸ்யமாக வாசிக்கத் தூண்டியது.படைப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts